Wednesday, May 14, 2025

மாதர் சங்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

 இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்பே பதிவுகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது எப்போது சாத்தியமாகும் என்பது தெரியாததால் ஒரு பாராட்டை பதிவு செய்யவே இந்த இடைக்கால பதிவு.


பொள்ளாச்சி பாலியல் அராஜக வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் "சாகும் வரை ஆயுள் தண்டனை" வழங்கப் பட்டுள்ளது. 

தங்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நின்று   இத்தீர்ப்பினை  சாத்தியமாக்கிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும்  அதன் பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.

போராட்டங்களுக்காக அவர்கள் மீதும் மாணவர், வாலிபர் சங்கத் தோழர்க மீதும்  பதியப்பட்ட வழக்குகளை  அரசு திரும்பப் பெற வேண்டும். 

Sunday, May 4, 2025

தொடரும் ரத்த பாரம்பரியம்

 வெள்ளிக்கிழமை அன்று மோசமான ஒரு விபத்து. இரண்டு இடங்களில் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று தெரியவில்லை.

இத்தனைக்கும் நடுவில் சின்ன நிறைவு.

சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டது. எங்கள் தோழர் கணேசன் ரத்தம் கொடுத்தார்.

ரத்த வங்கிக்கு  என் மகனும் என் சகலையின் மகனும் உடன் சென்றனர். மற்றவர்கள் பயன் பெற நீங்களும் ரத்த தானம் தருகிறீர்ளா என்று கேட்க இருவரும் ஒப்புக் கொண்டு முதல் முறையாக ரத்த தானம் செய்தனர். என் மகன் இதற்கு முன்பு இரு முறை முயற்சித்தும் வெய்ன் சரியாக கிடைக்கவில்லை. 


நான் 65 முறை ரத்தம் கொடுத்துள்ளேன். என் சகலையும் 25 முறைக்கு மேல் கொடுத்துள்ளார்.


எங்கள் வாரிசுகள் புதுக் கணக்கை துவக்கியுள்ளது மகிழ்ச்சியே.


Thursday, May 1, 2025

தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்

 


தினமலரின் ஜால்ரா முடியல

கீழே உள்ள தின மலர் செய்தியை ஒரு தோழர் மெனக்கெட்டு கொண்டு வந்து கொடுத்தார். எதுக்கு என்னை டென்ஷன் செய்கிறாய் என்று கேட்டதற்கு நீங்க எழுத மேட்டர் கொடுத்திருக்கேன் என்றார்.



ஒரு பிரதமராக உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி, மாறு வேடப் போட்டியில் கலந்து கொள்வது போல விதம் விதமாக ஆடைகள் மட்டும் அணிந்து கொள்வார்.

 அவர் அணியும் ஆடைகள் எதுவும் எளிமையானது கிடையாது. இயல்பானது கிடையாது. யாருக்கோ வாழ்வு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பார்கள் என்று சொல்வார்களே, அந்த ரகம் இதெல்லாம்.

 அந்த அற்பத்தனத்தின் உச்சம்தான் அவர் பெயர் பொறிக்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் கோட்டை ஒபாமா வந்த போது அணிந்தது. நாட்டில் உள்ள அனைவரும் கழுவி கழுவி ஊற்றிய பின்பு அந்த ஆடையை ஏலம் போட்டார்கள்.

 ஒரே நாளில்  நாலு முறை, ஐந்து முறை என்று உடை மாற்றுவதெல்லாம் கொழுப்பன்றி வேறில்லை, அல்லது மோடிக்கு ஏதாவது தோல் வியாதி இருந்து பக்கத்தில் உள்ளவர் மூக்கை சுளிப்பார்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

 அப்படி இருக்கையில்  “உங்களில் ஒருவன் – உடை வழி உணர்த்தும் பிரதமர்” என்றெல்லாம் தலைப்பு கொடுத்திருப்பதெல்லாம்  தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்.

 நியாயப்படிப் பார்த்தால் மேலே உள்ள படத்தில் வடிவேலு கேட்பது போன்ற கேள்வியைத்தான் தின மலர் கேட்டிருக்க வேண்டும்.

சங்கிகள் சினிமாவுக்கு கதை எழுதலாம்

 சங்கிகளால் மட்டுமே இப்படிப்பட்ட கதைகளை உருவாக்க முடியும். இந்த கதையை ஒரிஜினலாக எழுதிய ஆள் திரைப்படத்துறைக்கு சென்றால் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

 இந்த கதையை எங்கே படித்தேன் என்று நீங்கள் சுலபமாக ஊகித்து விடுவீர்கள். ஆமாம். மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான்.

 மத வெறியேற்றுவதற்காகவே  பொய்ப்பிரச்சாரங்களோடும் சிகண்டிகளோடும் செயல்படும் குழு அது.

 


சம்பவம் நடந்த அன்று பஹல்காம் சுற்றுலாவிற்கு சென்று வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏக்தா திரிவேதி என்ற பெண்மணி கொடுத்த வாக்குமூலம் மிகவும் முக்கியமான ஆதாரமாக உள்ளது.

 தாக்குதல் நடந்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பஹல்காம் சென்ற அவரும் & அவரது குடும்பத்தினரும், குதிரை ஓட்டிகளின் சந்தேகத்திற்கிடமாக நடத்தைகளால் mini Switzerland அருகில் வந்தும் உள்ளே செல்லாமல் திரும்பியிருக்கின்றனர்.

 அவரது குதிரையோட்டி, நல்ல ஆங்கிலத்தில் இவரோடு பேசிக் கொண்டே வந்ததில், இவருக்கு சந்தேகம் தோன்றுகிறது. அதற்கு அந்த ஆள், தான் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்ததாகவும், பின் அந்த வேலையை விட்டு ponywala வந்ததாக சொல்கிறான். பணம் எத்தனை கிடைத்தாலும், எந்த ஒரு மனிதனும் ஆசிரியர் வேலையை விட்டு விட்டு கழுதை மேய்க்க வர மாட்டான்

 மேலும், மிகச் சிறியதான satellite ஃபோன் ஒன்றை வைத்துள்ளான். அதில் அழைப்பு வரவே, குதிரையை ஓரிடத்தில் நிற்க வைத்து விட்டு, சற்று தள்ளி சென்று பேசி விட்டு திரும்பியிருக்கிறான். உருதுவில் பேசியதில் , சில முக்கிய விஷயங்கள் , இந்த பெண்மணியின் காதில் விழுந்திருக்கின்றன. அதில் முக்கியமானது 35 துப்பாக்கிகளை இன்று மேலே கொண்டு சென்று பதுக்கியிருக்கிறோம் என

 இதையெல்லாம், கேட்டு அந்த பெண்மணி mini Switzerland செல்ல சந்தேகப்பட்டு, தன் குழுவினரை அழைத்து திரும்ப சொல்லியிருக்கிறார். அவர்கள் 'இத்தனை தூரம் வந்து விட்டோம், photos எடுத்துக்கொண்டு உடனே திரும்பி விடலாம்' என சொன்னதற்கெல்லாம் ஒத்து கொள்ளாமல் 'உடல் நிலை சரியில்லை, அவசரம்' என சொல்லி, எதற்கும் எங்கும் நிற்காமல் திரும்பியிருக்கிறார்கள். அதற்குள் இன்னோரு ponywala அந்த பெண்மணியிடம் ' yahan rahna teen nahi mam. Sheegra vapaz chale jaayiye ' (இங்கிருப்பது பாதுகாப்பு அல்ல, சீக்கிரம் இங்கிருந்து சென்று விடுங்கள்' என்றிருக்கிறான். அவர்களோடு இரண்டு மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறி, போலீஸூக்கு அழைத்து தகவல் சொல்லியிருக்கின்றனர்.

 இதேபோன்று பல சுற்றுலாப் பயணிகள் சம்பவத்தன்று போலீஸ் அவசர எண்ணில் அழைத்துள்ளனர் ஆனால் எதிர்ப்பக்கம் "அப்படியா ஓகே" என்று சாதாரண பதில் மட்டுமே வந்ததுள்ளது. ஆனால், அந்த புள்ளிகளை இணைக்க போலீஸார் தவறியது ஏன்.!!?

 

 பிகு: ஏக்தா திவாரி என்றொரு உ.பி யைச் சேர்ந்த தொலைக்காட்சி விளம்பர மாடல் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பஹல்காம் போனதாகவும்  அந்த தீவிரவாதிகளை பார்த்ததாகவும் சொல்லியுள்ளார். அவரது அறிக்கையே பல முரண்பாடுகளும்  சந்தேகங்களும் நிறைந்துள்ளதாக தெரிகிறது. அதை பட்டி டிங்கரிங் பார்த்து மாநிலம், பெயர் எல்லாம் மாற்றி கதை சொல்லி விட்டார் மத்யமர் சங்கி. 

 

 

 

 

Wednesday, April 30, 2025

உங்களின் தியாகமே எங்களுக்கான உரமாக . . .

 





சூரியன் உதிப்பதும் தெரியாமல் அஸ்தமிப்பதும் தெரியாமல் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை வேண்டும் என்று கேட்டார்கள். பேரணியாய் திரண்டு கேட்டார்கள். முதலாளிகளால் முதலாளிகளுக்காக நடத்தப்படும் முதலாளிகள் அரசால் இந்த கோரிக்கை வைக்கப்படுவதையே சகிக்க முடியவில்லை.

 சிக்காகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்  இன்றும் ஏவல் துறையாகவே செயல்படும் காவல் துறை குண்டாந்தடிகளால் தாக்கியது. துப்பாக்கியால் தோட்டாக்களை உமிழ்ந்தது. கொலை வெறி அடங்காததால் தலைமை தாங்கியவர்களை தூக்கிலிட்டு குரல் வளையை நெறித்தது.

 அந்த தியாகிகளின் நினைவைப் போற்றத்தான் உலகத் தொழிலாளர்கள் எல்லோருமே மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

 தோழர்களே உங்கள் தியாகம்தான் பல முன்னேற்றங்களை உழைப்பாளி வர்க்கம் அடைய அடி உரமாக இருந்தது.

 உயிரைக் கொடுத்து நீங்கள் நடத்திய போராட்டம்தான் உரிமைக்குரல் எழுப்ப உற்சாகம் தருகிறது.

 லாப வெறியில் தகிக்கும் முதலாளிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை. வாரத்திற்கு நூறு மணி நேரம் வேலை செய், மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பாய் என்றெல்லாம் உபதேசிக்கிறது.

 முதலாளிகளின் விசுவாசிகளாகவே ஆட்சிகளும் இருக்கிறது. போராட்டங்களை ஒடுக்க காவல் துறையை ஏவி விடும் போக்கு அப்படியே தொடர்கிறது.

 நீங்கள் சென்ற வழியில் போராட்டப்பாதையில் உழைப்பாளி மக்களின் உரிமை காக்க உறுதியோடு செயல்படுவோம் என்று மே தின சூளுரை ஏற்கிறோம்.

 மே தினம் வெல்க, மே தினத் தியாகிகளுக்கு செவ்வணக்கம்.

அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்

 



பாமக அராஜகக்கும்பலிடமிருந்து உயிர் தப்பிய அந்த நாள்

  

2013 ல் நடந்த சம்பவத்தை முகநூல் நினைவு படுத்தியது. வாழ்வில் மறக்க முடியாத ஒரு திகில் நாள் இது. அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 மரம் வெட்டிகளாக இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் குடிசை கொளுத்திகளாக வளர்ச்சியடைந்துள்ளனர்.

 அக்கட்சியின் நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் தைலாபுரம் தோட்டத்து வாசலில் உள்ள மூன்று தலைவர்களின் சிலைகள் இருப்பதுதான் உருத்தலாகவே உள்ளது.

 அன்றைய அகில இந்திய இணைச்செயலாளரும் மத்திய மண்டல பொதுச்செயலாளருமான தோழர் பி.சன்யால் முகநூலில் இட்ட பதிவின் மொழியாக்கத்தை படித்து  பதறிப் போய் தொலைபேசியில் அழைத்து பேசியதும் இப்போது நினைவுக்கு வந்தது, வேறு சில கசப்பான சம்பவங்களும் கூட. . .

 


 

 

Wednesday, May 1, 2013

பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்

நேற்று காலை நன்றாகவே தொடங்கியது. மாலையில் கடலூரில்   இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும்  முடிவிற்காக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும்  திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு.  இன்னும் ஒரு கிளையில் தோழர்களோடு பேச வேண்டிய அவசியம்  இருந்தது.

திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற  தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து விட்டு இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை மணிக்கு வந்தேன். காவலர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று  விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு என்றார்கள்.

கூட்டம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.  என்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன்.
புதுச்சேரி, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை
நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு செய்தோம்.

புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு  எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம்  தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ  எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள் இருப்பார்கள். அவர்கள் எனது காரின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள்.
தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு  பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.  இருள் நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில் என்னால் என்றும் மறக்க முடியாது. மற்றவர்களும் காரை நோக்கி ஓடி வந்தார்கள். அங்கே எரிந்து  கொண்டிருந்தது ஒரு இரு சக்கர வாகனம்.


டிரைவர் திரு வெங்கடேஷ் சமயோசிதமாக ரிவர்ஸ் கியர் போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர் சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை வந்தது.

பாதையின் துவக்கத்தில் இருந்த கிராமத்திலோ திருவிழா நடந்து கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது படியவில்லை.

மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால் மேம்பாலம் அருகே ஒரு போர் நடந்ததன்  அடையாளங்களாக கற்களும் கண்ணாடி துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் திண்டிவனம் பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. பதினோரு மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தால்  செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல் மரத்தை வெட்டி சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல்  வந்திருந்ததால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு பத்து கிலோமீட்டர் கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள் முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். இப்போதான் சார் வெட்டிட்டு ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும் போது பார்த்தேன். ஸ்டேசனுக்கு சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும். வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும் பிடித்தோம்

சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி  சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம் வெட்டிகளுக்கு வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா மரங்களையும் அரசே வெட்டி விட்டது.


பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.

கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவது என்ன போராட்ட வடிவம்?

மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். தைலாபுரம் தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா என்ன?

மரம் வெட்டி என்றால் கோபம் வருகிறது. இப்படி மரத்தை வெட்டி
போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?

உங்கள் குடும்பத்தவர்களே உயிர் போகும் நிலையில்  ஆம்புலன்ஸில் சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா? உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும் மருத்துவத்தை படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?

குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய சமுதாயத்தை கழகங்கள் சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த என்ன யோக்கியதை உங்களுக்கு
உள்ளது? ஜாதிய வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும்
கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?

அசம்பாவிதம் எதுவுன் நிகழாததால் என்னால் இப்படி பதிவு  எழுதி கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று  சொல்ல முடிகிறது.

ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????